.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

செல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு..!!

Unknown | 9:39 PM | 0 comments

 
”நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்… வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம்.
“அது எப்படி… என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?” என்று யோசிக்கிறீர்களா… வெயிட்… உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்…(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன)
அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்தபோது சும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்தும் விட்டார்கள். ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது. ‘செல்போனில் இருந்து டெலிட் செய்த ஒரு வீடியோ எப்படி இண்டர்நெட்டுக்குப் போகமுடியும்? என்பதுதானே உங்கள் டவுட். அதற்கான விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச்சிச் சம்பவங்களையும் பார்த்துவிடுவோம்.
அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ரம்யா. துறுதுறுவென துள்ளித் திரியும் டீன் ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கிறாள். உடன் படிக்கும் மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார்கள் என அப்பாவை நச்சரிக்கவே, அவரும் ஒரு காஸ்ட்லியான கேமரா செல்போனை வாங்கிக் கொடுத்தார்.
ஒருநாள் பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, செல்போனில் தன் உடலில் துணியில்லாமல் படம் பிடித்தால் என்ன என்று தோன்றியது. உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம் துணியில்லாத தன்னுடைய அந்த வீடியோவை ரசித்துப் பார்த்துவிட்டு டெலிட் செய்துவிட்டாள். ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது.
இதேபோல் நெல்லையைச் சேர்ந்த லட்சுமி -குமார் தம்பதியரும் தங்கள் அந்தரங்கத்தை செல்போனில் வீடியோவாக எடுத்து பின்னர் அதை டெலிட் செய்து விட்டனர். ஆனால் அந்த போன் ஒரு நாள் தொலைந்து போனது. புது செல்போன் வாங்கிக் கொண்டார்கள். பழைய போனை மறந்தும் விட்டார்கள். ஆனால் பழைய செல்போனில் இருந்த அந்த தம்பதியினரின் அந்தரங்கம் இப்போது இணையதளம் முழுக்க பரவிக் கெண்டிருக்கிறது.
இதுமட்டுமல்ல, குற்றாலத்தில் குளியல் போடும் கல்லூரி மாணவிகளின் வீடியோ, ஹாஸ்டல் ரூமில் பர்த்டே பார்ட்டி கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போடும் மாணவிகளின் வீடியோ… என ஏகப்பட்ட வெரைட்டிகளில் அந்தரங்க வீடியோக்கள் இண்டர்நெட்டில் நிரம்பிக் கிடக்கின்றன. செல்போனில் டெலிட் செய்யப்பட்ட ஒரு வீடியோ எப்படி இணையத்துக்குப் போனது என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர்.
அந்த புதிருக்கான விடையின் பெயர் ‘ரெக்கவரி சாஃப்ட்வேர்
(recovery software) .
மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும் ஒன்றுபோல் ஒரு விஷயம் நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமராக்களும் ஒருநாள் பழுதடைந்தது. அவற்றைச் சரி செய்ய கடைகளில் கொடுத்திருந்தார்கள். அங்கிருந்துதான் அவர்களின் மானம் இணையதளத்தில் பறக்கவிடப்பட்டது.
இதுபோன்ற வில்லங்கச் சம்பவங்களின் பின்னணி என்ன? அண்ணாநகரில் செல்போன் கடை வைத்திருக்கும் மூர்த்தி விரிவாகச் சொல்கிறார்.
”செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விஷயமே புதுசாகத்தான் இருக்கும்.
அந்த விஷயம் தெரியாமல்தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை செல்போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள். பின்னர் டெலிட்டும் செய்துவிடுகிறார்கள். ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது.
சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன டெலிட் செய்யப்பட்டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள். இதற்காக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பல ‘ரெக்கவரி சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன. இதன் மூலம் திரும்பப் பெறப்படும் வீடியோ மற்றும் போட்டோக்களில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் போதும், உடனே அதை இணையத்தில் விற்றுவிடுவார்கள். இந்த மாதிரியான ‘ஹோம் மேட் செக்ஸ் வீடியோக்கள் எனப்படும் சம்பந்தப்பட்டவர்களே எடுக்கும் படங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் ஏக கிராக்கி என்பதால் இந்த அயோக்கியத்தனத்தை பல கடைக்காரர்கள் துணிந்து செய்கிறார்கள் என்கிறார்.
இதைத் தவிர்க்க என்ன செய்வது?
முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவையோ கொண்டு செல்லாதீர்கள். காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது. அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம். ஆனால்… ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகிறார்கள்.
அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் ‘வெப்கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கேமரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள். கம்ப்யூட்டரில் அது பதிவு செய்யப்படலாம். அந்த கம்ப்யூட்டர்கள் ஒருநாள் பழுதடைந்து சரி செய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பரவக்கூடும். ஜாக்கிரதை!
ஒரு ஆபாச தளத்தில் ஒரு பெண்ணின் விடியோ வெளியானால் போதும்… உலகம் முழுக்க அது பரவி விடும். அப்புறம் அந்தப் பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாது. அசிங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.
இப்போது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கேமராக்களின் வரவால் ஒவ்வொருவரும் கேமராமேனாகி விட்டார்கள். பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு நுண்ணிய கேமராக்கள் வந்து விட்டன.தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகளின் ட்ரையல் ரூம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்டமிடுங்கள்.
.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1