சென்னையில் இருந்து புறப்பட்ட அபுதாபி விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு 147 பேர் உயிர் தப்பினர்
சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபி செல்ல இருந்த விமானத்தில் திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டது. உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் 147 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
அபுதாபி விமானம்
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு எத்தியர்டு ஏர்லைன்ஸ் விமானம் இன்று
(08-06-2013) அதிகாலை 5 மணிக்கு செல்ல இருந்தது. அதில் 140 பயணிகளும், 7 சிப்பந்திகளும் ஏறி தயாராக இருந்தனர்.
விமானத்தின் கதவுகள் மூடப்பட்டன. பின்னர் விமானி, விமானம் புறப்படும் முன்பாக இறுதி கட்ட சோதனைகள் செய்தார். அப்போது விமானத்தில் எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருப்பதை அவர் கண்டுபிடித்தார்.
147 பேர் உயிர் தப்பினர்
உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் விமான நிறுவன பொறியாளர்கள் குழு ஈடுபட்டது.
நீண்ட நேரத்துக்கு பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டது. இதையடுத்து 5 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விமானம் அபுதாபிக்கு புறப்பட்டு சென்றது. விமானி உரிய நேரத்தில் எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை கண்டுபிடித்துவிட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 147 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
Category: அபுதாபி, மாநில செய்தி

0 comments