நோய் பாதிப்புக்கு உதவி பெற மருத்துவ முகாம் நாளை [18-05-2013]பெரம்பலூரில் நடக்கிறது.
பெரம்பலூர் ஆட்சியரகத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் புற்றுநோய், காசநோய் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாதாந்திர உதவித்தொகை பெற, நோய் பாதிப்புக்குள்ளான பயனாளிகளைக் கண்டறியும் சிறப்பு முகாம் சனிக்கிழமை (மே 18) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் ஏற்கெனவே நோய்களால் பாதிக்கப்பட்ட 706 நபர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை பயனடையாதோரில் உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை பெற்றுள்ள புற்றுநோய் பாதிப்புக்குள்ளான 18 வயது முதல் 65 வயதிற்குள்பட்டோர் அறுவைச் சிகிச்சை செய்து கதிர்வீச்சு சிகிச்சை பெறும் 9 மாத காலத்திற்கும், சிகிச்சை மூலமாக பலனற்ற (புற்றுநோய் மூன்றாம், நான்காம் நிலையில் உள்ளவர்களுக்கு) ஆயுள்காலம் முழுவதிற்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.
நோயாளி தனது புற்றுநோய் சிகிச்சை குறித்த மருத்துவ குறிப்புகள், உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை, குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் -2, வங்கி விவரம், கணக்கு எண் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
காசநோய் பாதிப்புக்குள்ளானவர்கள்: காசநோய்க்காக மருத்து உட்கொள்ளும் காலத்திற்கு மட்டும் மாதந்திர உதவித்தொகை வழங்கப்படும். உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை பெற்றுள்ள காசநோய் பாதிப்புக்குள்ளான 18 வயது முதல் 65 வயதிற்குள்பட்டோர் விண்ணப்பித்து பயன் பெறலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் உழவர் பாதுகாப்புத் திட்ட அட்டை, குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் - 2, வங்கி கணக்கு எண் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள்: உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை பெற்றுள்ள 18 வயது முதல் 65 வயதிற்குள்பட்டோர் விண்ணப்பிக்கலாம். சிறுநீரக பாதிப்புக்குள்ளானவர்கள் ரத்த சுத்திகரிப்பு (டயாலிஸிஸ்) வாரந்தோறும் செய்து கொண்டுள்ள 6 மாதத்திற்கு உதவித்தொகை பெற்று, பின்னர் நோயின் தன்மையை பொறுத்து உதவித்தொகை வழங்குவது நீட்டிக்கப்படும்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளோர், மாற்று அறுவை சிகிச்சை செய்த நாளிலிருந்து ஓராண்டிற்கு உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல், சிகிச்சை விவர நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் - 2, வங்கி கணக்கு எண் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
Category: மாவட்ட செய்தி

0 comments