பள்ளிவாசல் புனரமைப்புக்கு பேரவைத் தொகுதி நிதி!
சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளிவாசலை புனரமைக்க நிதி வழங்கலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்துள்ளார் என அதிமுக அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளரும், தமிழ்நாடு வஃக்பு வாரியத் தலைவருமான ஏ.தமிழ்மகன் உசேன் தெரிவித்தார்.
சிதம்பரம் லால்கான் பள்ளிவாசலுக்கு ஏ.தமிழ்மகன் உசேன் செவ்வாய்க்கிழமை வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அவருக்கு அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இக்கூட்டத்துக்கு முகமதுஜியாவுதீன் தலைமை வகித்தார். தில்லை ஆர்.மக்கீன் வரவேற்றார்.
கடலூர் மாவட்ட ஜமாத் தலைவர் நுôருல் அமின் அஜ்ரத், மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச்செயலாளர் ஜமாலுதீன், இஸ்மாயில் நாஜி, லியாகத்அலி, முகமதுஅலி, மீர்அமீது, உசேன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பின்னர், ஏ.தமிழ்மகன் உசேன் செய்தியாளர்களிடம் கூறியது: ஹஜ் பயணத்துக்கு கடந்த ஆண்டு 2,113 பேர்தான் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இந்த ஆண்டு கூடுதலாக 600 பேருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதி வழங்கியுள்ளார். ஹஜ் பயணத்துக்கு ரூ.10 லட்சம் நிதி ஏற்கெனவே வழங்கப்பட்டது. அதனை தற்போது ரூ.30 லட்சமாக முதல்வர் உயர்த்தியுள்ளார். ரூ.3 கோடி நிதி வழங்கி வஃக்போர்டு மேம்பாட்டு நிதி திட்டத்தையும், மாவட்டம் தோறும் உருது அகாதெமியையும் முதல்வர் தொடங்கிவைத்துள்ளார்.
ஏற்கெனவே, பணியிலிருந்து ஓய்வுபெற்று வறுமையில் வாடிய வஃக்பு வாரியப் பணியாளர்கள் 77 பேருக்கு நிலுவைத் தொகை தலா ரூ.3 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் வஃக்பு வாரிய சொத்துகள் ரூ.14,500 கோடி அளவு உள்ளன. ஆனால் கணக்கில் ரூ.8,300 கோடிக்கான சொத்துகள்தான் உள்ளன. மீதமுள்ள ரூ.6 ஆயிரம் கோடி சொத்துகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்றார் ஏ.தமிழ்மகன் உசேன்.
Category: மாநில செய்தி


0 comments