அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சுறுசுறுப்பு- கலக்கத்தில் அரசு அதிகாரிகள்!
சென்னை, நவ.10:
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அதிரடி சோதனை நடத்தி பலரையும் கைது செய்து வருகின்றனர். இதனால், அரசு அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழக அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் வந்ததால், அவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்வது, அல்லது திடீரென்று சோதனை நடத்தி ஆவணங்களை, லஞ்ச பணத்தை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். குறிப்பாக, பண்டிகை காலங்களில் அதிகமாக லஞ்சம் வாங்குவார்கள் என்று கருதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவார்கள்.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் பெரிய அளவிலான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சுறுசுறுப்பு காட்டி வருகின்றனர். தீபாவளிக்கு முதல்நாள் தொழிலாளர் நலத்துறையின் கூடுதல் இயக்குநர் கைது செய்யப்பட்டார்.
அதை தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை சென்னை மணலி புதுநகர், வளசரவாக்கம், பல்லாவரம், ஆவடி ஆகிய இடங்களில் லஞ்சம் வாங்கியதாக 4 பேரை கைது செய்தனர். பெரம்பலூரிலும் அதிரடி சோதனை நடத்தி ஒரு அதிகாரியை கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்திலும் சோதனை நடத்தி ஒருவரை கைது செய்தனர். அடுத்த நாளான நேற்று முன்தினம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வாகன போக்குவரத்து சோதனைச் சாவடியிலும், கூடுவாஞ்சேரி பத்திரப்பதிவு அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி, லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் கடலூரிலும் பெயர் மாற்றம் மற்றும் வீட்டு முகவரி மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய நகராட்சி அதிகாரி கைது செய்யப்பட்டார். இவ்வாறு கடந்த ஒரு வாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். பல அதிகாரிகளையும் கைது செய்துள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த திடீர் சுறு சுறுப்பால் அதிகாரிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
Category: மாநில செய்தி


0 comments