அனைத்து அரசு பள்ளியிலும் ஆங்கில வழி கல்வி பிரிவு வரும் கல்வி ஆண்டில் துவக்கம்!
விருதுநகர், நவ.12:
தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி முறை உள்ளது. தேர்ச்சி விகிதம், ஆங்கில வழி கல்வி உள்ளிட்ட காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த வாரம் சென்னையில் நடந்த முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது:
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளில் சத்துணவு சாப்பிடுவோருக்கு 3 செட் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு 4வது செட் சீருடையை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 2011ம் ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 5 துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பிரிவுகள் துவக்கப்பட்டன. 2012ல் துவக்கப் பள்ளிகளில் 1ம் வகுப்பும், நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6ம் வகுப்பிலும் ஆங்கிலவழி கல்வி துவக்க உத்தரவிடப்பட்டது.
இதனால் நடப்பு நிதியாண்டில் பெரும்பான்மையான மாவட்டங்களில் தலா 50 முதல் 100 பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி பிரிவுகள் துவக்கப்பட்டுவிட்டன.
2014ம் கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் மற்றும் 6ம் வகுப்புகளில் ஒரு தமிழ் மற்றும் ஒரு ஆங்கில வழி கல்வி பிரிவு துவக்க வேண்டும். மேலும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் குறித்த காலத்திற்குள் மாணவர்களை சென்றடைய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Category: கல்வி


0 comments