எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்–2 தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.வரும் 29–ந்தேதி கடைசி நாள்!

சென்னை
மேல்நிலை மற்றும் இடைநிலை கல்வி பொதுத்தேர்வுகளை நடப்பாண்டு எழுத உள்ள தனித்தேர்வர்கள் வரும் 29–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசுத்தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.
தனித்தேர்வர்கள்
இதுகுறித்து அரசுத்தேர்வுகள் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மார்ச் 2014–ம் ஆண்டு நடைபெறவுள்ள மேல்நிலை மற்றும் இடைநிலை கல்வி பொதுத்தேர்வுகளுக்கு, தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 18–ந்தேதி முதல் 29–ந்தேதி வரை வரவேற்கப்படுகின்றன. தனித்தேர்வர்கள் www.tndge.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
கடந்த செப்டம்பர் 2013–ம் ஆண்டு தேர்வின் போது, தனித்தேர்வர்கள், தனியார் இணைய தளமையங்களின் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்த போது பல தவறுகள் காணப்பட்டன. அவர்களது பெயர், தலைப்பெழுத்து, பிறந்த தேதி, பாடங்கள் மற்றும் பயிற்று மொழி போன்றவற்றில் பல தவறுகள் ஏற்பட்டன. இதனால், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்குவதிலும், மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதிலும் சிரமங்கள் ஏற்பட்டன.
ஒருங்கிணைப்பு மையங்கள்
தனித்தேர்வர்கள், தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு புகைப்படம் எடுத்தல், விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல், பதிவேற்றம் செய்த பின்னர் கிடைக்கும் கட்டண செலுத்துச் சீட்டினைக் கொண்டு மாவட்டக் கல்வி அலுவலகத்தில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துதல் ஆகிய 3 பணிகளும் வெவ்வேறு இடங்களில் செய்யப்பட வேண்டியிருந்ததால், தனிதேர்வர்களுக்கு அலைச்சலும், நேரம் மற்றும் பண விரயமும் ஏற்பட்டது.
எனவே இச்சிரமங்களைத் தவிர்த்திடும் பொருட்டும், பிழைகள் ஏற்படாமலும் விண்ணப்பங்களை பதிவு செய்திட வேண்டி, தேர்வுத்துறையால் பயிற்சி அளிக்கப்பட்ட பணியாளர்களை கொண்ட ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின் விவரம் இணையதளத்தில் உள்ளன. அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அல்லது, மாவட்டக் கல்வி அலுவலகங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இணைதளத்தில் தகவல்
இம்மையங்களில், தேர்வர்கள், இணைய புகைப்படக்கருவி மூலமாக புகைப்படம் எடுக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. எனவே, தனித்தேர்வர்கள் இம்மையங்களுக்கு செல்லும்போது புகைப்படம் எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இம்மையங்கள் மூலமாகவே விண்ணப்பங்களை சமர்ப்பித்து தேர்வுக்கட்டணத்தையும் செலுத்திட வசதி செய்யப்பட்டுள்ளது.
இம்மையங்கள் மூலமாக 3 பணிகளையும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் மேற்கொள்ள இயலும். எனவே, இம்மையங்களை தனித்தேர்வர்கள் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். மேல்நிலைத்தேர்வு மற்றும் இடைநிலைக்கல்வி பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள், கல்வித்தகுதி, வயது மற்றும் தேர்வுக்கட்டணம் ஆகிய விவரங்களை அறிந்து கொள்ள www.tndge.in என்ற இணையதளத்தினை பார்வையிட்டு பயன்பெறலாம். அறிவியல் பாட, செய்முறை பயிற்சி வகுப்பில் இதுவரை பெயர் பதிவு செய்யாதவர்கள் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி 29–ந்தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Category: மாணவர் பகுதி

0 comments