காற்றாலை மின் உற்பத்தி பூஜ்ஜியம் ஆனது ! தமிழகமெங்கும் அறிவிக்கப்படாத மின்தடை அமல்! பொது மக்கள் கடும் அவதி!
நெல்லை: தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மின்தடை நீடித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மின்தடை நீக்கப்படுவதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. கடந்த மே மாதம் முதல் தென்மேற்கு பருவக்காற்று வழக்கம்போல் நன்றாக வீசியதால் காற்றாலை மின் உற்பத்தி கைகொடுத்தது. கடந்த 2 ஆண்டுகளில் அதிகரித்துள்ள கூடுதல் மின் தேவையும் ஓரளவு சமாளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் காற்று சீசன் குறைந்ததாலும், செப்டம்பர் மாத தொடக்கம் முதல் மினி கோடை போல் வெயில் கொளுத்தியதா லும் மின் நுகர்வு அதிகரித்த நிலையில், தேவையை சமாளிப்பது சவாலானதாக மாறியது. படிப்படியாக குறைந்து வந்த காற்றாலை மின் உற்பத்தி கடந்த ஒரு வாரமாக மின்வாரியத்தினருக்கு மீண்டும் சோதனையை கொடுத்து வருகிறது. இதனால் அறிவிக்கப்படாத மின்வெட்டு மெல்ல மெல்ல தலைதூக்கி வருகிறது.
நாள்தோறும் ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு நேரங்களில் குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது மின்தடை செய்யப்பட்டு வந்தது. கடந்த 3 தினங்களாக காற்றாலை மின் உற்பத்தி முழுமையாக நிற்கும் அளவிற்கு சென்றுள்ளது. நேற்று முன்தினம் இரவு காற்றாலைகள் மூலம் 86 மெகாவாட் மின்சாரமே கிடைத்தது. இது நேற்று அதிகாலை 25 மெகாவாட்டாக குறைந்தது. நேற்று காலை 8 மணிக்கு பூஜ்ஜியம் என்ற நிலையை அடைந்து அனைத்து காற்றாலைகளும் ஓய்வு எடுத்தன. 2500 முதல் 3,000 மெகா வாட்டுக்கு குறையாமல் அட்சயபாத்திரம் போல் மின்சாரம் வழங்கி வந்த காற்றாலைகள் ஓய்வெடுக்கும் நிலைக்கு சென்றுவிட்டதால் நேற்று மின்வெட்டு நேரம் மேலும் அதிகரித்தது.
பல இடங்களில் 4 மணி நேரத்திற்கு குறையாமல் மின்தடை செய்யப்பட்டது. அதிகாலை 6.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விட்டு விட்டு சில இடங்களில் மின்சாரம் தடைபட்டது. சில மாத இடைவெளிக்குப் பின் கடுமையான மின்வெட்டு மீண்டும் தலைதூக்கி உள்ளதால் தொழில் நிறுவனத்தினர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Category: மாநில செய்தி

0 comments