போதிய வசதிகளின்றி அரசுக் கல்லூரிகளில் தொடங்கப்படும் புதிய படிப்புகள்..
இதனால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது. கல்லூரிகளில் புதிய படிப்புகள் தொடங்குவதற்கு, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்து உரிய அனுமதியைப் பெற வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது, தொடங்கப்படவுள்ள புதிய படிப்புக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா என்ற விவரங்களையும் கல்லூரிகள் தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில், பல்கலைக்கழகம் அனுமதி அளிக்கும். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும் இதே நடைமுறையைத்தான் பின்பற்ற வேண்டும். ஆனால், ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசுக் கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டாலும்கூட புதிய படிப்புகளைத் தொடங்க பல்கலைக்கழகமும், அரசும் அனுமதி அளிக்கின்றன. இந்த வசதியை சில அரசுக் கல்லூரிகள் தவறாகப் பயன்படுத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மாணவர்களின் நலனுக்காக அல்லாமல், தனிப்பட்ட பேராசிரியரின் நலனைக் கருத்தில் கொண்டு சில கல்லூரிகள் புதிய படிப்புகளைத் தொடங்குவதாகப் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அரசுக் கல்லூரிப் பேராசிரியர்கள் சிலர் கூறியது: தங்களுக்கு வேண்டிய பேராசிரியர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் பணியமர்த்துவதற்காகவே, சில கல்லூரிகள் புதிய படிப்புகளைத் தொடங்குகின்றன. உதாரணமாக, ஊட்டி அரசுக் கல்லூரியில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த பி.ஏ. பாதுகாப்பு (டிஃபன்ஸ்) பட்டப் படிப்பு, சென்னையில் உள்ள அரசுக் கல்லூரி ஒன்றில் அண்மையில் தொடங்கப்பட்டது.
இதுபோல, பல கல்லூரிகள் மாணவர்களின் நலனைக் காற்றில்பறக்கவிட்டு, தனிப்பட்ட விருப்பங்களுக்காகப் புதிய படிப்புகளைத் தொடங்குகின்றன. போதிய வகுப்பறைகள், ஆய்வக வசதிகள் இல்லாமலேயே இதுபோன்ற புதிய படிப்புகள் தொடங்கப்படுவதால், மாணவர்களின் கல்வித் தரம் கேள்விக்குறியாகி வருகிறது. இந்த உள்கட்டமைப்பு வசதிகளை முழமையாக மேம்படுத்த குறைந்தபட்சம் 4 ஆண்டுகளுக்கு மேலாகும் என்பதால், முதல் இரண்டு ஆண்டுகள் இந்தப் படிப்பில் சேரும் மாணவர்கள்பாதிக்கப்படும் நிலை உருவாகி வருகிறது. எனவே, தேவையின் அடிப்படையில், போதிய உள்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுள்ள கல்லூரிகளுக்கு மட்டுமே புதிய படிப்புகளைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்றனர்.
Category: மாநில செய்தி
0 comments