பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! கலெக்டர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் விண்ணப்பப்ப படிவங்கள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்தவராக, அதாவது 30.9.2009-க்கு முன் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.
மனுதாரர் தனது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாமல் தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 30.9.2014 தேதியில் 45 வயதைக் கடந்தவராகவும், மற்ற வகுப்பினர்கள் 40 வயதைக் கடந்தவராகவும் இருக்கக் கூடாது.
மனுதாரருடைய குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரத்துக்கு மிகாமலும், எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ, மாணவியாகவும் இருக்கக் கூடாது. தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம். மனுதாரர் சுயமாக தொழில் செய்பவராகவோ, சுயமாக சம்பாத்தியம் செய்பவராகவோ இருக்கக்கூடாது. புதிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து 30.11.2014-ம் தேதிக்குள் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1-க்குள் அளிக்க வேண்டும்.
ஏற்கெனவே உதவித்தொகை பெறுபவர்கள், நிகழாண்டுக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணத்தை 30.11.2014-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Category: மாவட்ட செய்தி
0 comments