மதுரை உள்ளிட்ட 4 ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசம்!
மதுரை, செப். 30:
மதுரை உள்ளிட்ட 4 ரயில்வே ஸ்டேஷன்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிருபர்களிடம் ரயில்வே கோட்ட மேலாளர் ரஸ்தோகி அளித்த பேட்டி:
மதுரை ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்வதற்காக
ஸீ90
லட்சம் செலவில் மறுசுழற்சி முறையில் தண்ணீரை பீய்ச்சி அடிக்க செய்யும் கருவி கொண்டு வரப்பட உள்ளது. இதனுடன் உயர் அழுத்த குழாய் பொருத்தப்பட உள்ளது. இந்த குழாயை பயன்படுத்துவதன் மூலம் 60 சதவீத தண்ணீரை சேமிக்க முடியும். புதுடெல்லி ரயில்வே ஸ்டேஷனில் உள்ளது போல மதுரை ஸ்டேஷனிலும் 6 எஸ்கலேட்டர்கள் உள்ளன. எஸ்கலேட்டர்களில் ஏறி செல்ல சில பயணிகள் பயப்படுகின்றனர். இதனால் எஸ்கலேட்டர் அருகில் லிப்ட் பொருத்தப்பட உள்ளது. மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள 10 ரயில்வே ஸ்டேஷன்களில் இந்த லிப்ட் பொருத்தப்பட இருக்கிறது. தொலைதூர ரயில்களான ராமேஸ்வரம் & சம்பர்கிராந்தி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் & ஓகா ரயில் உள்ளிட்ட ரயில்களில் பயணத்தின் இடையே சுத்தம் செய்யும் முறை நவ. 5 முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்காக ஆர்ஓ பிளான்ட் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் ரயில் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இலவசமாக வழங்கப்படும். ரயில்களில் பயன்படுத்தப்படும் போர்வை, பெட்ஷீட் உள்ளிட்ட துணிகளை மதுரை ரயில்வே ஸ்டேஷனிலேயே சலவை செய்யும் வசதி கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Category: மாநில செய்தி


0 comments