11-ம் வகுப்பு பயிலும் முஸ்லீம் மாணவிகள் மௌலானா ஆசாத் கல்வி உதவித்தொகை பெற செப். 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கல்வியில் சிறந்து விளங்கி, வசதியின்றி கல்வியை தொடர இயலாத சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு உதவிடும் வகையில், மெüலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், பெரம்பலர் மாவட்டத்தில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர் மற்றும் பார்சி மதங்களைச் சேர்ந்த 11-ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு ரூ. 12,000 கல்வி உதவித் தொகை இரு தவணைகளில் (11-ம் வகுப்பிற்கு ரூ. 6,000, பிளஸ் 2 வகுப்பிற்கு ரூ. 6,000) வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற சிறுபான்மையின மாணவிகள் 10-ம் வகுப்பில் குறைந்த பட்சம் 55 சத மதிப்பெண்கள் பெற்று நிகழாண்டில் (2014- 2015) மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11-ம் வகுப்பு பயில்பவராக இருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். வருமானச் சான்றிதழ், ஓய்வூதிய ஆணை, ரூ. 20 மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத்தாளில் உறுதி ஆவணம் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், தேவையான ஆவணங்களை இணைத்து தாங்கள் பயிலும் கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம், உறுதி ஆவணம் மற்றும் இதர விவரங்களை
http://maef.nic.in/REGDemo.aspx
என்ற இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கல்வி நிலைய தலைமை ஆசிரியர், தாளாளர் தங்கள் கல்வி நிலையத்தில் 11-ம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவிகளிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று சரிபார்த்து, அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிறசேர்க்கை 1-ல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் உரிய சான்றுரைகளுடன் கையொப்பமிட்டு விண்ணப்ப படிவம் மற்றும் பிறசேர்க்கை 1 மற்றும் 2-ல் குறிப்பிட்டுள்ள படிவங்களுடன் The Secretary, Maulana Azad Education Foundation (Ministry of Minority Affairs, Government of India). Chelms Ford Road, New Delhi-110055 என்ற முகவரிக்கு செப். 30-ம் தேதிக்குள் சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.
Category: மாணவர் பகுதி


0 comments