அதிக மதிப்பெண்கள் பெற மாணவர்களுக்கு டிப்ஸ்.
ஒரு பாடத்தை எந்த முறையில் படிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். சரியான முறைகளை பின்பற்றுவதால் பாடத்தை எளிதாக புரிந்து படிக்க முடியும். படிக்க போகும் பாடம் முழுவதையும் மேலோட்டமாக வாசிக்க வேண்டும். தலைப்புகளுக்கும் துணைத்தலைப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதனால் இப்பாடம் எதைப்பற்றியது என்பது விளங்கும். பாடச்சுருக்கத்தை நன்றாக படிக்க வேண்டும். இதில் உள்ள சில வார்த்தைகளை படிக்கும் போது மனதில் கேள்விகள் எழும்.
* வினா எழுப்புதல்:
பாடச்சுருக்கத்தை வாசித்த பிறகு, பாடத்தில் உள்ள தலைப்புகள் அனைத்தையும் கேள்விகளாக மாற்றி நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் அதைத் தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். எதற்காக இதைப் படிக்கிறோம்? அதன் பயன் என்ன? என்பதை அறிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.உதாரணமாக, அறிவியலில் மின்னாற் பகுப்பு என்ற தலைப்பை வாசிக்கும் போது மின்னாற் பகுப்பு என்றால் என்ன? என்ற கேள்வியை மனதில் எழுப்ப வேண்டும்.
* வாசித்தல்:
அர்த்தம் புரியும்படி கவனமாக வாசிக்க வேண்டும். படித்தவற்றை நமக்கு ஏற்கனவே தெரிந்தவற்றோடு தொடர்புபடுத்தி உதாரணத்தோடு படிக்க வேண்டும். புத்தகத்தில் அதிகமாக அடிக்கோடு இடுவதை தவிர்க்க வேண்டும். மிகவும் முக்கியமான வார்த்தைகளை மட்டும் அடிக்கோடிட வேண்டும். இதனால், திரும்பிப் பார்க்கும் போது குழப்பமில்லாமல் எளிதாக பாடத்தை நினைவிற்கு கொண்டு வர முடியும்.
* திரும்பி சொல்லி பார்த்தல்:
வாசித்து முடித்த பிறகு, முக்கியமானவற்றை நினைவுக்கு கொண்டு வந்து சொல்லி பார்க்க வேண்டும். இம்முறையானது படித்தவற்றை நினைவில் நிறுத்திக் கொள்ள மிகச் சிறந்த வழியாகும். படித்தவற்றை சொந்த வார்த்தைகளில் சத்தமாக சொல்லிப் பார்க்க வேண்டும். மேற்கண்ட முறைகளை பின்பற்றி ஒரு பிரிவை முடித்தவுடன் அடுத்த பிரிவுக்கு செல்ல வேண்டும்.
* மாதிரி தேர்வு எழுதிப் பார்த்தல்:
பாடம் முழுவதையும் படித்து முடித்த பிறகு மாதிரி தேர்வு எழுதிப் பார்க்க வேண்டும். ஒரு முறை முதலில் இருந்து அனைத்தையும் திரும்பப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு தலைப்பும் எவ்வாறு மற்றவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கடைசியாக பாடச்சுருக்கத்தை இன்னொரு முறை வாசிக்க வேண்டும்.
* நினைவாற்றல் மேம்பட:
ஒரு விஷயத்தை சாதாரணமாக ஞாபகம் வைத்து கொள்வதை விட, சில குறிப்புகளால் மனதில் வைத்துக் கொண்டால் அவை எளிதில் மறக்காது. உதாரணமாக வண்ணம், ஓசை மற்றும் எழுத்துக்கள் போன்றவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். எந்த விஷயத்திலும் கவனம் சிதறாமல் இருக்க தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவது அவசியம்.
எளிய உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலும் ஞாபகசக்தி அதிகரிக்கும். தினமும் நடைப்பயிற்சி, நீச்சல் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட்டால் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும். உணவுப் பொருட்களில் பச்சை காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்வதால் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.
அதிக எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட பொருட்களை தவிர்ப்பது நலம். இவை மட்டுமில்லாமல் நல்ல சுற்றுச்சூழலும், அமைதியான குடும்ப பின்னணியும், நல்ல நண்பர்களையும் கொண்டிருப்பது தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். இவற்றை பின்பற்றினால் மதிப்பெண்கள் அதிகம் பெற்று சாதிக்கலாம்.
Category: மாணவர் பகுதி


0 comments