பெரம்பலூர் அருகே ஓடும் பஸ்சில் பெட்ரோல் குண்டுவெடிப்பு 9 பேர் படுகாயம்!
ஜெயங்கொண்டத்தில் இருந்து பெரம்பலூர் வழியாக துறையூருக்கு நேற்று இரவு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. லாடபுரம் பிரிவு சாலை அருகே வந்த போது திடீரென பஸ்சில் டமார் என குண்டு வெடித்தது. இதனால் பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் பஸ்சில் இருந்த 9 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த நக்கசேலத்தை சேர்ந்த செல்வராஜ், ரங்கராஜ், துறையூர் எரகுடியை சேர்ந்த விஜயராகவன், நல்லியம்பட்டியை சேர்ந்த ராமாயி ஆகிய 4 பேரை பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த 5 பேர் அம்மாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பஸ்சில் வெடித்தது பெட்ரோல் குண்டு என தெரியவந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பஸ்சில் குண்டு வெடித்த சம்பவம் நாச வேலையா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments