குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்டவர்கள் பிளஸ் 2ல் சாதனை!!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டு, பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவ, மாணவியர் 41 பேரில் 36 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் ஐந்துபேர் ஆயிரத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் செங்கல்சூளை, பட்டாசு ஆலை, தீப்பெட்டி ஆலை, அச்சகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி பள்ளியில் சேர்க்கப்பட்டனர். அங்கு 5ம் வகுப்புவரை படித்த அம்மாணவ, மாணவியர், 6ம் வகுப்பில் ரெகுலர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர்.
இந்தாண்டு 41 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதினர். அதில், 36 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் சிவகாசி எஸ்.சி.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மகாலட்சுமி 1068, வத்திராயிருப்பு இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெயந்தி 1053, வத்திராயிருப்பு இந்து ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சேர்வரன் 1036, சிவகாசி முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மோகன்ராஜ் 1027 , சரவணன் 1011 பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும், 9 பேர், 900க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
"இவர்களில், உயர்கல்வி படிப்போருக்கு, தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் 500 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்" என, மாவட்ட தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் நாராயணசாமி தெரிவித்தார்.
Category: கல்வி
0 comments