ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பினராக சவுதி அரேபியா மறுப்பு!
ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு உறுப்பினராக தேர்வு பெற்ற சவுதி அரேபியா அதை ஏற்க மறுத்து விட்டது. சிரியா விவகாரம் உள்பட பல பிரச்சினைகளில் ஐ.நா. இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டியது.
ஐ.நா. பாதுகாப்பு சபை
நியூயார்க்கில் ஐ.நா.சபை தலைமை அலுவலகம் செயல்படுகிறது. உலக நாடுகளில் உள்நாட்டு கலவரம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் போது ஐ.நா.வின் பாதுகாப்பு சபை கூடி, அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த ஐ.நா. பாதுகாப்பு சபையில் மொத்தம் 15 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. இவற்றில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ரஷியா, சீனா ஆகிய 5 நாடுகளும் ’வீட்டோ’ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினராக இருக்கின்றன. மற்ற 10 நாடுகளும் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
சவுதி அரேபியா மறுப்பு
இந்த 10 நாடுகளில் ஒரு உறுப்பினராக சவுதி அரேபியா தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரத்திலேயே அதை ஏற்க சவுதி அரேபியா மறுத்து விட்டது. இந்த நிராகரிப்பை சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்தது.
சிரியா விவகாரத்தில் அதிருப்தி
சிரியா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு சவுதி அரேபியாவிற்கு அதிருப்தி அளித்ததே இந்த முடிவுக்கு காரணமாகும். சவுதி வெளிநாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் அதை சுட்டிக்காட்டி இருக்கிறது.
அதில், சிரியாவில் தனது நாட்டு மக்களையே கொன்று குவித்த அதிபர் ஆசாத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஐ.நா. பாதுகாப்பு சபை தோல்வி அடைந்து விட்டது. ரசாயன ஆயுதங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியது. மேலும் பாலஸ்தீனம்-இஸ்ரேல் சண்டை, மத்தியகிழக்கில் ஆயுத குவியலையும் தடுக்காமல் இரட்டை வேடம் போடுவதாகவும் புகார் கூறியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். பல லட்சம் பேர் அகதிகளாக நாட்டை விட்டே வெளியேறினர். எனவே சிரியா அதிபர் ஆசாத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தின. ஆனால் ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதை தடுத்து விட்டது. அதே நேரத்தில் சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு, சவுதி அரேபியா ஆதரவு தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Category: வளைகுட செய்தி


0 comments