.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சிறந்த தலைமுறையை உருவாக்குவோம்!

Unknown | 9:20 PM | 0 comments

students

கல்லூரி வளாகங்களில் அதிகரித்து வரும் குற்றங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் ஆகியோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எதிர்காலம் இளைஞர்களின் கையில்தான் உள்ளது என்று, இன்றைய இளைஞர்களை உத்வேகப்படுத்தி வரும் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்களின் கனவுகளை தகர்க்கும் விதமாக உள்ளது கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் நடைபெறும் சம்பவங்கள்.
சமீபத்தில் தூத்துக்குடியில் கல்லூரி பேராசிரியர் மாணவர்களால் கல்லூரி வளாகத்திலேயே விரட்டி விரட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதே போன்று, கடந்த வருடம் சென்னையில் உமா மகேஸ்வரி என்ற உயர்நிலைப் பள்ளி ஆசிரியை மாணவனால் கத்தியால் குத்தி கொடூரமாக கொல்லப்பட்டார்.
இந்த இரு குற்றங்களிலும் இடங்கள்தான் வித்தியாசப்படுகின்றன. ஆனால், குற்றங்களின் எண்ணங்கள் மாணவர்களிடத்தில் ஒன்றாகத்தான் பிரதிபலிக்கின்றன.

கல்லூரி மாணவர்களால் கொலை செய்யப்பட முதல்வர் சுரேஷ்
இந்தக் கொலைகளின் மூலம் ஆசிரியர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதே கொலை செய்தவர்களின் நோக்கமாக உள்ளது. பெரும்பாலான நாடுகளில் பொதுவான  விஷயங்களில் பள்ளிக்கூடங்களோடு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். பெற்றோர்கள் மற்றும் ஆசியர்கள் மத்தியில் இணைப்பு பாலமாக ஒவ்வொரு பகுதிகளிலும் பொதுநல அமைப்புகள் செயல்பட்டு வரும்.
கடந்த செப்டம்பர் மாதம் உலகளாவிய மாநாடு போர்த்துகல் நாட்டில் உள்ள  லிஸ்பனில் நடைபெற்றது. இந்த மாநாட்டை “European Research Network About Parents in Education ” (ERNAPE) என்ற அமைப்பு ஏற்பாடு செய்தது.
இதில் 32 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்துரையாடல்கள், விவாதங்கள் நடைபெற்றன. இந்தியாவில் இருந்து ஆராய்ச்சியாளர் ராஜ் அவர்கள் இதில் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவருடைய கருத்துக்கள் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் 21.10.2013 அன்று வெளியாகி இருந்தது. அதனை மையப்படுத்தி எழுதப்பட்டதே இந்தக் கட்டுரை.
இந்த நிகழ்வில் குடும்பம்  மற்றும் பள்ளிகளுக்கிடையேயான  ஒற்றுமை, சமூகம் மற்றும் கல்வி ரீதியாக ஒருங்கிணைத்தல், சம உரிமை மற்றும் நீதி வழங்குதல் என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆராய்ச்சியாளர் ராஜ் அவர்கள் இந்த நிகழ்வில் கூறியதாவது:
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் பெற்றோர்கள் ஆக்கப்பூர்வமான முறையில் ஈடுபாடு கொள்ளும் அளவுக்கு முறையான வசதிகள் செய்யப்படவில்லை. என்னுடைய அனுபவத்தில் கல்வி நிறுவனங்களை நடத்தும் உரிமையாளர்களிடம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடர்பான ஒரு முறையான பார்வை இல்லை.
இதனால் அவர்களுக்கு கல்வி என்றால் என்ன என்ற ஒரு முறையான அனுபவம் இல்லை. அது மட்டுமல்லாமல் பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்க கூட்டத்தில் முக்கியமான பிரச்னைகளைப் பற்றி விவாதிப்பதில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயமாகும்.
நம் இந்திய மக்களிடமும் இதுபோன்ற விஷயங்களில் சரியான பார்வை இல்லாமல் உள்ளது. “வருமுன் காப்பதே  சிறந்தது” என்ற நம்முடைய கொள்கை ஆர்வப்படுத்தப்படாமல் உள்ளது. கல்வி நிறுவனங்களை மேலாண்மை செய்யும் நிர்வாகங்களிடம் போதிய அனுபவங்கள் இல்லாமல் உள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள செயல்பாடுகள் மதிப்பெண்கள் மற்றும் வேலைகளை கருத்தில் கொண்டே செயல்பட்டு வருகின்றன. ஒழுக்கங்கள் மற்றும் நன்னடத்தைகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து, சமூகத்திற்கு பயன்படக்கூடிய சிறந்த இளைஞர்களை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்கள்  தோல்வியை தழுவி வருகின்றன.
இதனால், பள்ளிகளில் நடைபெறும் சிறு விஷயங்கள் கூட இதுபோன்ற தவறான விஷயங்களுக்கு மாணவர்களை இட்டுச் செல்கின்றன. அரசுகளும் இதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருந்து செயல்படுவதில்லை.
ஆனால், மற்ற நாடுகளில் பள்ளி  மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் வரம்புகள் இந்தியாவில் இல்லை என்பதுதான் உண்மையான விஷயமாகும். தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற கொலை சம்பவங்கள் நடப்பது ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இடையிலான புரிந்துணர்வு மிகக் குறைவாகவே இருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
அது எவ்வாறு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற அறிவு, பள்ளி மற்றும் கல்லூரியை நிர்வகிப்பவர்களுக்கு இல்லை என்பதை உணர முடிகிறது. அதை அரசும் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் வேதனைக்குரிய விஷயமாகும்.
இது எதிர்கால சமுதாயத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இது விஷயத்தில் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து கல்வி மற்றும் பயிற்றுவித்தல் தவறாக பயன்படுத்தப்படும்போது, அது விஷயத்தில் அக்கறை எடுத்து செயல்பட வேண்டும்.
எதிர்கால தலைமுறையை சரியாக உருவாக்க தவறிவிட்டால் அது மிகப் பெரிய இழப்பாகும். கல்வியை இன்றைய கால சூழலில் ஒரு வியாபாரமாக கருதக்கூடிய சூழல்தான் நிலவி வருகிறது. இதன் மூலம் மனித வளங்கள் வழிப்பறி செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் 17-20 சதவிகிதம் பேர்தான் வேலையில் உள்ளனர். இன்று கல்லூரிகளில் ஒழுக்கம் என்ற வார்த்தை மாணவர்களிடம் இருந்து மறக்கடிக்கப்பட்டு, அவர்களை தவறாக வழிநடத்தி செல்லப்படுகிறது.
குறை தீர்க்கும் அமைப்பு
ஒவ்வொரு கல்லூரிலும் மாணவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு செய்யும் அளவுக்கு “குறைகளை நிவர்த்தி செய்யும் அமைப்பு” ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதன் மூலம் மாணவர்களிடையே ஏற்பட்டிருக்கும்  பிரச்னையாக இருந்தாலும், ஆசிரியர்களிடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னையாக இருந்தாலும், படிப்பு தொடர்பான பிரச்னையாக இருந்தாலும் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
கட்டுப்பாடான உடை
அதே போன்று, கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு ஒரு முறையான உடை கலாச்சாரத்தை உருவாக்க முன்வர வேண்டும். ஏனென்றால், இன்று உடை என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.
“ஆள் பாதி ஆடை பாதி” என்பார்கள். அது எந்தளவுக்கு சாத்தியம் என்பதை நாம் நம்முடைய மாணவ மாணவிகளுக்கு உண்மைப்படுத்த வேண்டும்.
மொபைல் போன் தடை
இன்று, மொபைல் போன் இல்லாத ஒருவர் இல்லை என்று கூறும் அளவுக்கு அனைவரிடமும் மொபைல் போன்களின் ஆதிக்கம் வேரூன்றி உள்ளது. அது கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள் என்று வித்தியாசமில்லாமல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
பெரும்பாலான கல்லூரிகளிலும் மொபைல் போன்களை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். இது விஷயத்தில் கவனம் எடுத்து கல்லூரிகளில் மொபைல் போன்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதித்து, அதை முறையாக பின்பற்ற வேண்டும்.
உடல் மற்றும் மனரீதியான பயிற்சி
ஒவ்வொரு கல்லூரிலும் மாணவ, மாணவிகளுக்கு உடல் மற்றும் மன ரீதியான பயிற்சிகள் அளிக்கப்படும். இதனால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடத்தில் நல்ல ஒரு புரிந்துணர்வு ஏற்படும்.
சீனா போன்ற நாடுகளில் உடற்பயிற்சி இல்லாத பள்ளிக்கூடங்களோ, கல்லூரிகளோ இல்லை என்று சொல்லுமளவுக்கு அங்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். இதை நாமும் நம்முடைய நாட்டில் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
இதன் மூலம் மாணவகளுக்கு படிப்பு ஒரு கடமையாக அல்லாமல், அதை ஒரு ஆர்வமாக செய்வார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.
மாணவர்களிடம் வித்தியாசமில்லாமல் அணுகுதல்
மாணவர்களிடத்தில் வயது மற்றும் அவர்களுடைய நிலையை பொறுத்து ஆசிரியர்கள் பழக வேண்டும். இன்று பெரும்பாலான கல்லூரிகளில் பொருளாதாரத்தை மையமாக வைத்து அவர்களிடம் தங்களுடைய அக்கறையை வெளிப்படுத்துகின்றனர்.
அப்படி அல்லாமல் ஏழை  இது அவர்களிடம் நல்ல ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் மாணவர்களை சிறந்தவர்களாக உருவாக்க உளவியல் ரீதியான கல்வி மற்றும் அறிவுசார் கல்வியை ஏற்படுத்த அரசுகள் முன்வர வேண்டும். இதில் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் இணைந்து ஒரு குழுவை ஏற்படுத்தி, ஒரு முறையான கல்வித் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
இது விஷயத்தில் பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்வி நிறுவனங்களை நடத்தும் உரிமையாளர்களும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, சிறந்த தலைமுறையை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நெல்லை சலீம்

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1