பெரம்பலூர் அருகே பேருந்து மோதல்:கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
பெரம்பலூர் அருகே, கல்லூரி மாணவி மீது அரசுப்பேருந்து மோதியதைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை மாலை லேசான தடியடி நடத்தினர்.
பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூரில், பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி உள்ளது. இங்கு பயின்று வரும் வேப்பந்தட்டையைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவி சத்யா கல்லூரி எதிரே செவ்வாய்க்கிழமை மாலை பெரம்பலூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் ஏற முயற்சித்தபோது, பேருந்தை ஓட்டுநர் ஓட்டிச் செல்ல முயற்சித்தாராம். இதில் கீழே விழுந்து மாணவி காயமடைந்தார்.
இதையடுத்து அங்கு பேருந்திற்காக நின்றிருந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்து ஓட்டுநரைக் கண்டித்தும், கல்லூரி எதிரே தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் அங்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் மறியல் போராட்டத்தை அவர்கள் கைவிடாததால், மாணவர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.
Category: மாணவர் பகுதி


0 comments