RSS கட்டளைக்கு அடிபணிந்தது BJP!
புதுடெல்லி:மூத்த பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானியின் கடுமையான எதிர்ப்புகளை புறக்கணித்து பா.ஜ.கவின் மக்களவை தேர்தல் கமிட்டி தலைவராக குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் வேட்பாளர் என்ற தனது கனவிற்கான முதல் படிக்கட்டாக தேர்தல் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம் மோடி பெற்றுள்ளார். கோவாவில் இருநாள்கள் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. இதில் கட்சியின் பிரசாரக் குழு தலைவராக மோடி அறிவிக்கப்பட்டார்.
மோடியை பிரசாரக் குழு தலைவராக பாஜக நியமித்துள்ளது கட்சியின் மூத்த தலைவர் அத்வானிக்கு அரசியல்ரீதியாக பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அடுத்தபடியாக பாஜகவின் முக்கிய, முன்னணி தலைவராக விளங்கியவர் அத்வானி. பிரசாரக் குழு தலைவர் பதவியை மோடிக்கு அளிக்கக் கூடாது என்று வலியுறுத்திதான் தேசிய செயற்குழுக் கூட்டத்தைப் அத்வானி புறக்கணித்தார்.
எனினும் அவரது எதிர்ப்பை மீறி மோடிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது, கட்சியில் அத்வானிக்கு அளிக்கப்பட்டு வந்த முக்கியத்துவம் குறைந்து விட்டதையே இது காட்டுகிறது. அத்வானி தவிர ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா, உமா பாரதி, சத்ருகன் சின்ஹா உள்ளிட்டோரும் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இவர்களும் மோடிக்கு பொறுப்பு வழங்குவதை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.
கோவாவில் பா.ஜ.கவின் நிர்வாக குழு கூட்டம் துவங்கிய போதே மோடி அத்வானி இடையேயான உட்கட்சிப்போர் வெட்ட வெளிச்சமானது. வெள்ளிக்கிழமை நடந்த தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் அத்வானி கலந்து கொள்ளாததற்கு அவரது உடல்நிலை சரியில்லை என்பதே காரணம் என்றும், அடுத்து 2 நாட்கள் நடக்கும் தேசிய செயற்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார் என்றும் பா.ஜ.கவின் தேசிய தலைவரான ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
ஆனால், கட்சி தலைவரின் கட்டளையை புறக்கணித்து 2 நாட்கள் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தையும் அத்வானி புறக்கணித்துவிட்டார். மேலும் டெல்லியில் உள்ள அத்வானியின் வீட்டை மோடியின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் மோடிக்கு ஆதரவாக களமிறங்கியதோடு அத்வானி உள்ளிட்டோரின் எதிர்ப்புகள் புஷ்வாணமாகின. முடிவாக ஆர்.எஸ்.எஸ். கட்டளைக்கு அடிபணிந்தது பாரதிய ஜனதா கட்சி.
Category: மாநில செய்தி


0 comments