அதிர வைக்கும் அசைவ விலை....
கறிக்கோழி, ஆட்டிறைச்சி, காய்கறிகள், அரிசி என அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்தவற்றின் விலை உயர்வு சாமான்யர்களின் பட்ஜெட்டை பதம் பார்த்து வருகின்றன.
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் கறிக்கோழியின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. கறிக்கோழி உற்பத்தியில் முக்கிய இடம் பிடித்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் கறிக்கோழியின் விலை கிலோ ஒன்றிற்கு 180 ரூபாய் வரை உள்ளது.
அத்தியாவசியப் பொருட்களான சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் மற்றும் அரிசி காய்கறி போன்றவற்றின் விலையேற்றத்தினால் சாதாரண மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அசைவப் பிரியர்களையும் அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் கறிக்கோழியின் சில்லறை விற்பனை விலை கிலோ ஒன்றிற்கு 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே கறிக்கோழி உற்பத்தியில் ஈடுபட்டு வருவதோடு அவைகளே விலை நிர்ணயமும் செய்து வருகின்றன. இதை விடுத்து அரசே குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்யலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
கறிக்கோழி விலை மட்டுமல்லாமல், மற்ற அசைவ வகைகளின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. ஆட்டிறைச்சி மற்றும் மீன்களின் விலை பெரிதும் உயர்ந்துள்ளது.
மீன்பிடிக்க விதிக்கப்பட்டிருந்த 45 நாள் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு போன பிறகு மீன்களின் வரத்து அதிகம் இருக்கும் என்றும் இதனால் மீன்விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நிலைமை தலைகீழாகி இருக்கிறது. தடைக்காலத்திற்கு முன் 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒருகிலோ வஞ்ஜிரம் மீன் விலை தற்போது 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதாவது கிட்டதட்ட 200 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.
அதேபோல வவ்வால் மீன் விலை தடைக்காலத்திற்கு முன் 300 ரூபாயாக இருந்தது. தற்போது 500 முதல் 600 ரூபாயாக இருக்கிறது. சில சமயங்களில் சிலவகை மீன்களின் விலை கிலோ, ஆயிரம் ரூபாய் வரை போகிறது.
இதேபோல ஆட்டிறைச்சி விலையும் ஏறுமுகத்திலேயே இருக்கிறது. போன மாதம் வரை கிலோ 380 முதல் 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆட்டிறைச்சி தற்போது 100 ரூபாய் வரை உயர்ந்து 450 முதல் 500 ரூபாய் வரை விற்பனையாகிறது.
தீவனப் பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி இடங்களில் இருந்து விற்பனை இடத்திற்கு கொண்டு வரக்கூடிய செலவு என அசைவ வகைகளின் விலை உயர்வுக்கு காரணங்கள் சொல்லப்பட்டாலும், சுமை என்னவோ சாமான்யர்கள் தலையில்தான்.
அசைவ உணவு வகைகளின் விலை போலவே காய்கறிகளின் விலையும் ஏறுவதும் சிறிது இறங்குவதுமாக இருக்கிறது. அதிகபட்சமாக இஞ்சி கிலோ 140 ரூபாய்க்கும், பீன்ஸ் 70 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
தக்காளி 45 ரூபாய்க்கும்., கத்திரி, கேரட் வகைகள் 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இது கோயம்பேடு மொத்த விலை நிலவரமே. இதுவே சில்லறை விற்பனைக்கு போகும்போது மேலும் கூடுதலாக விற்கப்படுகிறது.
அசைவ, சைவ வகைகள் மட்டுமின்றி, அடிப்படை உணவான அரிசி விலையும் மாதா மாதம் கூடிக்கொண்டிருக்கிறது. போன மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு ரகத்திலும் கிட்டதட்ட 2 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை அதிகரித்து இருக்கிறது.
எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளின் விலையும் ஒட்டுமொத்தத்தில் 2 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
காய்கறி கடையோ., இறைச்சிக்கடையோ, எங்கு சென்றாலும் பாதிப்புக்குள்ளாவது தாங்கள் தான் என்று குமுறுகிறார்கள் சாதாரண மக்கள்.
குடும்ப பட்ஜெட்டில் இந்த விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் இல்லத்தரசிகள்.
வாரத்திற்கு ஒருநாள் என்றிருந்த இறைச்சி உணவு வகைகளை அதன் விலையால் வாங்கத் தயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் குடும்பத்தினர்.
இதன் எதிரொலி, உணவகங்களிலும் எதிரொலிக்கும் என்பதால், பர்சை பதம் பார்க்கும் இறைச்சி உணவுகள் அசைவப்பிரியர்களை அல்லாட வைத்திருக்கிறது.
Category: மாநில செய்தி

0 comments