மலிவு விலை சோலார் எல்இடி விளக்கு-பள்ளி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
காலி பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு சோலார் எல்இடி விளக்குகளை பள்ளி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் இயங்கிவரும் ஹைடெக் ரிசர்ச் பவுண்டேஷன் ஆராய்ச்சி நிறுவனத்தில் கோடைகால அறிவியல் பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காரைக்கால் ஆத்மாலயா பள்ளி 6ம் வகுப்பு மாணவி கீதாஞ்சலி, 3ம் வகுப்பு மாணவன் கிள்ளிவளவன், காரைக்கால் ஜவகர் நவோதயா பள்ளி மாணவன் ரத்னகுமார், நாகை மாவட்டம் குத்தாலம் டாக்டர் கல்யாணசுந்தரம் பள்ளி மாணவர் முகம்மது ஷமீர், பொறையார் தவசுமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவர் விஜய் சாமிநாதன், மாணவி காயத்ரி ஆகியோர் இந்த எளிய முறை சோலார் எல்இடி விளக்கினை வடிவமைத்துள்ளனர். அவர்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் ஜெயராஜ் மற்றும் முரளி ஆகியோர் உதவினர்.
எளிய முறை சோலார் எல்இடி விளக்கு குறித்து பள்ளி மாணவர்கள் கூறியதாவது: மக்கள் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் 2 லிட்டர் குளிர்பான பாட்டில்களை பயனுள்ள முறையில் பயன்படுத்த முடிவு செய்தோம். அதில் எல்இடி விளக்குகளை பேப்பர் பிளேட்டில் பொருத்தி உள்ளே வைத்தோம். 6 வோல்ட் திறன் கொண்ட பேட்டரி மற்றும் 5 வாட்ஸ் திறன் கொண்ட சோலார் பேனல் ஆகியவற்றை கொண்டு எளிய முறையில் இந்த விளக்கை வடிவமைத்தோம். சோலார் பேனல் மூலம் சூரிய சக்தி ஆற்றல் பெறப்பட்டு மின்சாரமாக பேட்டரியில் சேமிக்கப்படும். அந்த மின்சாரம் எல்இடி பல்புகளை ஒளிர வைக்கும். பாட்டிலின் அடிப்பகுதியில் பேட்டரியை பொருத்தி உள்ளோம்.
கடும் மின்வெட்டு, மின் கட்டண உயர்வு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு இந்த புதிய கண்டுபிடிப்பு பயனுள்ளதாக இருக்கும். இதன் தயாரிப்பு செலவு மிகவும் குறைவு. காலி பிளாஸ்டிக் பாட்டில், சில்வர் பாயில் உள்ள பேப்பர் பிளேட், பேட்டரி, ஸ்விட்ச், வயர், சோலார் பேனல், எல்இடி பல்புகள் ஆகியவை போதுமானது. எளிதில் யாரும் வடிவமைக்க முடியும்.
இந்த விளக்கு விடிய விடிய எரியும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் கொண்டு செல்லலாம். மாணவ, மாணவிகளுக்கும், இரவு நேரங்களில் வயலுக்கு செல்லும் விவசாயிகளுக்கு மிகவும் பயன்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Category: துனுக்குகள்

0 comments