பெரம்பலூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியல்!
பெரம்பலூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி அவரது உறவினர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மின்சாரம் தாக்கி சாவு!
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் மின்மாற்றியில் வேலைபார்த்த மின்வாரிய கள உதவியாளர் ஆலம்பாடியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 43) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மற்றொரு மின் ஊழியரான(மஸ்தூர்) மண்ணச்சநல்லூர் தழுதாழைப்பட்டியை சேர்ந்த சிதம்பரம் மின்சாரம் தாக்கியதில் காயம் அடைந்தார்.
இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர்கள் சாலை மறியல்!
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பன்னீர்செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் காலதாமதம் ஏற்பட்டதை கண்டித்தும், மின்விபத்தில் இறந்த பன்னீர்செல்வம் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பன்னீர்செல்வத்தின் உறவினர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், பெரம்பலூர்–துறையூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Category: மாவட்ட செய்தி


0 comments