மெட்ரிக் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர்களை சேர்த்தால் கடும் நடவடிக்கை!
சென்னை, டிச. 9:
மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர்களை மே மாதம் தான் சேர்க்க வேண்டும். முன்கூட்டியே மாணவர்களை சேர்க்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் எச்சரித்துள்ளது.
வரும் கல்வி ஆண்டில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை சில மெட்ரிகுலேஷன் பள்ளிகள் டிசம்பர் மாதமே தொடங்கியுள்ளதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இது விதிகளுக்கு முரணானது. மேலும், இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்ட விதிகளின்படி நுழைவு நிலை வகுப்புகளில் நலிவடைந்த மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினருக்கு குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த சட்டத்தின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடர்பான நடைமுறைகள், அதை மேற்கொள்ள வேண்டிய மாதம் ஆகியவற்றை நிர்ணயம் செய்து கடந்த ஏப்ரல் மாதம் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி ஒதுக்கீடு செய்துள்ள 25 சதவீத இடங்களை நிரப்புதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மேற்கொள்ள வேண்டும். எனவே வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை 2014 மே மாதம் மட்டுமே நடத்த வேண்டும் என திட்டவட்டமாக அறிவிக்கப்படுகிறது. அதை மீறி மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே நடத்தினால் அந்த சேர்க்கை ரத்து செய்யப்படும். மேலும் அப்படி செய்யும் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை சிபிஎஸ்இ மண்டல இயக்குன ருக்கும் மெட்ரிகுலேஷன் இயக்ககம் அனுப்பியுள்ளது. அதில் அரசின் உத்தரவுப்படி தமிழகத்தில் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகள் 2014&2015ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை 2014 மே மாதம் தான் நடத்த வேண்டும். இதை கண்காணித்து, உத்தரவை மீறும் சிபிஎஸ்இ பள்ளிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங் களை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இயக்ககம் சுற்றறிக்கை

Category: கல்வி


0 comments